வித்தியாவின் பாலியல் சித்திரவதைக் கொலை தொடர்பாக எதிர்பாராத அளவில் வடக்கு கிழக்கிலும் புத்தளம் போன்ற பிரதேசங்களிலும் ஓர் எதிர்ப்புப் போராட்டம் வெளிக்கிளம்பியுள்ளது. மிக நீண்ட காலமாக அடக்குமுறைக்குள் மெல்ல மெல்ல ஆழப்புதைந்த ஒரு சமூகம் மெல்லத் தலையெடுத்து வாழ்வியல் வெளிகளில் சமூக மனத்துடன் உலவத் தொடங்கியிருக்கிறது. தனது தொலைந்துபோன விழுமியங்கள் மீதான பச்சாதாபம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. வன்முறைக்குள் அடக்கிவைக்கப்பட்ட அதன் மனித உணர்வுகள் உணர்ச்சிகள் எல்லாம் ஏதோவொரு வகையில் வெளிப்படுத்தப்படுவது இயல்பு. தனிமனித உளவியலானாலும் சமூக உளவியலானாலும் அதேதான் நிலைமை.
இங்கு வித்தியாவிற்கு இழைக்கப்பட்ட கொடுஞ்செயலைக் கண்டித்து அது எழுந்திருக்கிறது. தனிமனித உளவியலின் தொகுப்பான சமூக உளவியல் வெளிப்பாடு இது. இதை வித்தியா என்ற தனிநபருக்கான போராட்டமாக மட்டும் பார்க்க முடியாது. இது இழந்துபோன விழுமியங்களை மீளுருவாக்கம் செய்ய ஏங்கும் சமூக மனங்களின் போராட்டமாக வரையறுக்க முடியும்.