பொதுப்புத்தியின் பொது நீரோட்டத்தோடு வெகுமக்களில் பெரும் பகுதியினரும் (கேள்விகளின்றி) பயணிப்பதுதான் வாழ்க்கை ஒழுங்காக மனித ஒழுக்கமாகப் பேணப்படுகிறது. பொதுப்புத்தி இன்றி பொதுமக்கள் என்ற கட்டமைப்புக் கிடையாது. இது எல்லா சமூகங்களுக்கும் பொருந்தும். எனவே பொதுப்புத்தியை நிராகரிக்க முடியாது. அதை விமர்சிக்க முடியும். அதிர்ச்சிக்குள்ளாக்குவதன் மூலம் அதை கேள்விக்கு உட்படுத்தி மேம்படுத்த முடியும். பொதுப்புத்தி என்பது வெகுமக்களின் தத்துவம் என்பார் கிராம்சி. எனவே அதை அறிவார்ந்த தளத்திலும் பண்பாட்டுத்தளத்திலும் மேல்நிலைக்குக் கொண்டுவருவதே மாற்றத்தை நேசிப்பவர்களின் கடமையாக இருக்க முடியும். இங்குதான் (அரசியல், சமூக) அமைப்புகள் மட்டுமல்ல, கலகக்காரர்களும் எதிர்மறுப்பாளர்களும் தமது பங்கை ஆற்றவேண்டியிருக்கும்.