வெறுக்கிறேன்!

உணர்ச்சிவசப்படாதே என அறிவுரை கூறுவோர் மீது
வெறுப்பு வருகிறது,
உணர்ச்சி அறிவுக் கண்ணை மறைக்கும் என்பவர் மீதும்தான்!

உணர்ச்சிகளற்ற உடலும் மனமும் இறந்துபோவதற்குச் சமம்.
அறிவற்ற உடலுக்கு இந்த துரதிஸ்டம் வாய்ப்பதில்லை.
மகிழ்ச்சி கோபம் அழுகை சந்தோசம் என எல்லாமும் அறிவினுள் இருப்பதில்லை.
ஆதலால் நான் உணர்ச்சிவசப்படுவதை சுகிக்க ஆவலாக இருக்கிறேன்.

அதற்குள் ஓர் “மன்னிப்பு” என்ற வார்த்தை உறங்கியிருத்தல்கூடும்.
அது அறிவின் அளவுகோலால் ஆனது.
மனதின் ஆழத்திலிருந்து எழுந்துவரும் அந்த வார்த்தை ஒரு பிரசவத்தின் தொப்பூழ்க் கொடியோடு வாயிலிருந்து வெளிவருதலில் ஓர் உயிர் இருக்கும். அருகாமை இருக்கும்.
ஆதலால் அறிவையும் நான் சுகிக்க ஆவலாக இருக்கிறேன்.
அறிவையும் உணர்ச்சியையும் எதிரணியில் நிறுத்தும் உங்கள் வார்த்தைகளை நான் வெறுக்கிறேன்.

ஆசைப்படுகிறேன்

கிழக்கு என எதை நீ அறிவிக்கிறாயோ அது எனக்கு மேற்காய்த் தோன்றுகிறது
சூரியன் கிழக்கில் உதிப்பதாக நீ அறிவிக்கிறபோது அது மேற்கிலிருந்து எழுவதாய்த் தோன்றுகிறது.
ஒரு மாலைநேர சூரியன் இழுத்துப் போட்டிருக்கிற வானம் எனக்கு காலைக் காட்சியாகத் தோன்றுகிறது.
தோன்றுதல்களுக்காய் எனை நீ தண்டிக்கவும் செய்கிறாய்.
சொல்லித்தரப்பட்டவைகளை உன்போலவே நானும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என விதிக்கிறாய்.
அதை என்னுடன் எடுத்துச் சென்று அடுத்த சந்ததியிடமும் கையளித்துக் கொண்டே இரு
போதித்துக் கொண்டே இரு என்கிறாய்.
கடவுளைக் காட்டி மிரட்டுகிறாய்.
மறுபிறவியைச் சொல்லி மிரட்டுகிறாய்
இருளைக் காட்டி மிரட்டுகிறாய்.
இருளற்ற வெளியில் ஒளிக்கு அர்த்தமேது
மனிதர்களற்ற உலகில் கடவுளுக்கு அர்த்தமேது.
வாழ்தல் அற்ற உலகில் மறுபிறவிக்கு அர்த்தமேது
யதார்த்தத்தை நம்பிக்கைகளால் இடம்பெயர்த்தல்தான் நீ கண்டுசொல்லும் வாழ்வு எனில்,
அது எனக்குத் தேவையில்லை.
மனதின் பிரபஞ்சத்தில் சுழன்று திரிய
நான் ஆசைப்படுகிறேன்.