அவள் அனாதையாகிவிட்டிருந்தபோது கவனித்தாள், தன்மீது
ஓர் இருள் துண்டொன்று போர்த்தப்பட்டிருப்பதை.
தாழப் பறந்த கிபீர் விமானங்கள்
கிழித்துவிட்டிருந்த துண்டாக இது இருக்கலாம்.
நிலமதிர வெடித்துச் சிதறிய குண்டின் செல்கள்
அரிந்தெறிந்த துண்டாகவும் இருக்கலாம்.
எது எப்படியாகிலும் அவள் அதைப் போர்த்தியிருந்தாள்
அல்லது
அது அவளைப் போர்த்தியிருந்தது.