பகடிவதையின் வேர்கள் குடும்பம், பாடசாலை போன்ற சமூகநிறுவனங்களில் பரந்து விரிந்திருக்கிறது. குடும்பத்துக்குள்ளோ பாடசாலையிலோ உறவு முறை அதிகாரம் சார்ந்தே செயற்படுகிறது. பெற்றோருடன் ஒரு பிள்ளை சமனாக இருந்து உரையாட முடிவதில்லை. பாடசாலையில் ஆசிரியருடன் சமனாக இருந்து உரையாட முடிவதில்லை. தமது கருத்துகளை அச்சமின்றி முன்வைக்க முடிவதில்லை. அவர்களது ஆலோசனைகள் கருத்தில் எடுக்கப்படுவதுமில்லை. இந்த நிறுவனங்களுள் கல்வி சார்ந்த அடக்குமுறையும் அழுத்தமும் (பாடசாலையாலும் குடும்பத்தாலும்) இணைந்தே செயற்படுத்தப்படுகிறது. பக்கத்து வீட்டுக்காரன்கூட “போய்ப் படியடா” என்று பிடரியில் தட்டுகிற உரிமையைக் கொண்டுள்ளான் என்பது எவளவு துயரமானது.