– திரையொழுக்கு.
தீபன் படம் பிரான்சின் அறியப்பட்ட இயக்குநரான ஜாக் ஓடியார் அவர்களால் இயக்கப்பட்ட பிரெஞ்சுப் படம். 2015 இன் கன்னஸ் விருதான பல்மடோர் விருதை வென்றிருக்கிறது. படத்தின் நாயகன் தீபன், நாயகி யாழினி, குழந்தை இளையாள் ஆகியோரைச் சுற்றி கதை நகர்கிறது. சுமார் எண்பது வீதமும் தமிழிலேயே வசனங்கள் போகிறது. அதனால் தமிழ் ரசிகருக்கு அருகில் படம் வருவதை புரிந்துகொள்ள முடியும். இக் காரணங்களால் (ஒரு குறிப்பிட்ட வட்டத்துள்) தமிழர்களால் இப் படம் பற்றி பேசப்படுவதும் அதன் விருது பற்றி பெருமை கொள்வதும் நடந்தேறுகிறது. அது புரிந்துகொள்ளப்படக் கூடியது.
அப்படியிருந்தும்கூட தமிழக சினிமாக்களுக்கு அலையாகச் செல்லும் நிலைமைபோலன்றி, ஐரோப்பிய திரையரங்குகளில் பெரும்பாலான ஐரோப்பியர்களும் கொசுறளவான தமிழர்களும் இவ்வாறான படங்களை திரையரங்குகளில் பார்க்கும் நிலைதான் உள்ளது. பிரசன்ன விதானகேயின் “பிறகு“ (With You Without You) என்ற படத்தையும் 2014 இல் திரையரங்கில் பார்த்துக்கொண்டிருந்தபோது, தமிழர்கள் பக்கத்து திரையரங்கில் ஓடிய “கத்தி“ திரைப்படத்துக்கு அலையாய் வந்திறங்கிக்கொண்டிருந்தனர். இதுதான் நமது சினிமா இரசனையின் இலட்சணம். திரையரங்கில் தீபன் படத்தை பார்த்துக்கொண்டிருந்த சுமார் 60 பேரில் நாம் 4 தமிழர்கள்தான் இருந்தோம்.