முடிச்சுகள்

பருத்தித்துறை காட்லிக் கல்லூரியில் 70 களில் முதலில் மைக்கல் கெலி என்ற ஆங்கிலேயர் இங்கிலாந்திலிருந்து ஆங்கில பாடம் படிப்பிக்க வந்திருந்தார். கொளுத்தும் வெயில் காலத்தில் அவர் கட்டைக் காற்சட்டையுடன் வந்தபோது கல்லூரி நிர்வாகம் அவரை அழைத்து நீளக்காற்சட்டை அணிந்து வருவதே கல்லூரியின் ‘டிசிப்பிளின்’ என்று சொல்ல, அவர் வீடு சென்று திரும்ப நீளக் காற்சட்டையுடன் வந்தார். எம்மைப்போல் அவரால் வெயிலை தாங்க முடியாததால் மிக அவதிப்பட்டார். கல்லூரி அசையவில்லை.

*

கலாச்சாரம் என்பது காலங்காலமாக பெண்களை முன்னிறுத்தி ஆண்களால் கட்டமைக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. பலியாகிக்கொண்டிருப்பதும் மனஉளைச்சலுக்கு ஆளாகிக்கொண்டிருப்பதும் பெண்களே.

*

இணையவேண்டியது கல்வியும் மதமுமல்ல, கல்வியும் அறிவும்!

கல்வியில் மதம் ஒரு (சமய) பாடமாக மட்டுமே இருந்துவிட்டுப் போகட்டும். மதமே முன்னிலைக்கு மாறிவிடுவது கூடாது.

*

மாற்றுப் பண்பாடுகளை உள்ளடக்கிய மாணவர்கள் ஆசிரியர்கள் கொண்ட பாடசாலைகளில் பண்பாடுகளுக்கு இடையிலான தகவமைதல் தேவை. இணக்கத்தன்மை தேவை.

*

பாடசாலைகளில் சரசுவதி சிலைகள், சிலுவைகள் தேவையில்லாத ஆணி.

பாடசாலைக்குள் எந்த மதத்தினதும் prayer தேவையற்றது.

மத சித்தாந்த வாசகங்கள் தேவையற்றது.

*

ஆண்களுக்கான பாடசாலை, பெண்களுக்கான பாடசாலை, ஒவ்வொரு மதங்களை சேர்ந்தவர்களுக்குமான தனித்தனி பாடசாலை என்ற வகைப்பாடு தேவையற்றது. பிள்ளைகள் போய்வரக்கூடிய வசதிக்காக பிரதேசங்கள் சார்ந்த பாடசாலைகள்தான் தேவை.

*

பாடசாலைகளை அரசியல் களமாக்குவது, இன மத விரோத மனப்பான்மையுடன் அணுகுவது நல்லதல்ல. எதிர்கால சந்ததியினரை உருவாக்கும் பாடசாலை ஒரு முக்கியமான சிவில்சமூக நிறுவனம் என்றவளவில் விரோத மனப்பான்மை சமூகமுன்னேற்றத்துக்கு பாதகமானது.

*

திருகோணமலை சம்பவம் தனிமையான பாடசாலை பிரச்சினையல்ல. அது சமூகத்துள் செயற்படும் மனநிலையின் பிரதிபலிப்பு. அதை சமூகங்கள் சரிசெய்ய முன்வர வேண்டும். செயற்பட வேண்டும். அதுவும் சிறுபான்மை சமூகங்களாக இருந்துகொண்டு இப்படி கயிறிழுப்பது பேரினவாததத்துக்கு சாதகமாகிறது. அம்புகளை மோதவிட்டு வேட்டைக்காரர்கள் பதுங்கியிருக்கிறார்கள்.

இதை எப்படி எதிர்கொள்வது என்பதே சமூகங்கள் முன் வைக்கப்பட்டுள்ள கேள்வி.

*

சமூகவலைத் தளங்களில் பொறுப்பற்று சொற்போராளிகளாக அல்லது ஆண்மய சிந்தனைக் காவாலிகளாக உலாவருவது இந் நிலைமைகளை இன்னும் சிக்கலாக்கும். சமூகப் பொறுப்புடனும் ஆய்வுத்தன்மையுடனும் பேச முன்வருதலே இன்றைய தேவையாக உள்ளது!

One thought on “முடிச்சுகள்”

  1. அம்புகளை மோதவிட்டு வேட்டைக்காரர்கள் பதுங்கியிருக்கிறார்கள்.
    பணி தொடர வாழ்த்துகள்

Leave a comment