“ஊழிக்காலம்“ மீதான எனது வாசிப்பு.
அண்மையில் வெளிவந்திருக்கும் ஒரு முக்கியமான போர்க்கால நாவலாக ஊழிக்காலத்தை சொல்ல முடியும். இந் நாவலை தமிழ்க்கவி என்ற பெண் எழுத்தாளர் எழுதியிருக்கிறார். 320 பக்கங்களைக் கொண்ட இந் நூலை தமிழினி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.
இந் நூல் வெளிவர காத்திரமான பங்களிப்புச் செய்த சயந்தன் தமிழ்க்கவியை (இந் நூலின் கடைசிப் பக்கத்தில்) இவ்வாறு அறிமுகமாக்குகிறார்.
“தமயந்தி சிவசுந்தரலிங்கம் (66) எனும் இயற்பெயர் கொண்ட தமிழ்க் கவி ஈழவிடுதலைப் போரில் தன்னையும் இணைத்துக்கொண்ட ஒரு மூத்த எழுத்தாளர். போராளிகளாலும் மக்களாலும் “மம்மி“ என்றும் “அன்ரி“ என்றும் அன்பாக அழைக்கப்பட்ட தமிழ்க்கவி ஈழப் போரில் உயிரை ஈந்த இரண்டு மாவீரர்களின் தாய்.“ என்கிறார்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் வானொலி, வானொளி உட்பட அதன் கலையிலக்கிய தளங்களில் தன்னை ஈடுபடுத்தியிருந்ததால் தமிழ்க்கவி பலராலும் அறியப்பட்டிருந்தார். புலிகள் அமைப்பில் போராளியாக இருந்த அவரின் ஊழிக்காலம் நாவல் அந்தத் தளத்தில் இயங்கவில்லை. அப்படி இயங்கவேண்டும் என்பதுமில்லை.