கிட்லரின் „மைன் காம்ப்“ புத்தகம் அரசியலாளர்களால் நிச்சயம் படிக்கப்பட வேண்டிய நூல் என நினைக்கிறேன். தேசியம் பற்றிய ஆபத்தான பக்கங்களை புரிந்துகொள்ள அதுவும் ஒரு விதத்தில் பங்களிக்கிறது. பிரபாகரன் அரசியல் ரீதியிலோ அல்லது இராணுவ ரீதியிலோ கிட்லரால் ஆகர்சிக்கப்பட்டாரா அல்லது அவரை அதிலுள்ள கருத்துகள், அணுகுமுறைகள் பாதித்தனவா என்பதெல்லாம் முன்னாள் புலி உதிரிகளிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும் என நான் நினைக்கவில்லை.அதேநேரம் அந்தக் கூற்றின் சாத்தியங்களையும் மறுத்துவிட முடியாது.
இத்தோடு சேர்த்து இன்னொரு தகவல். புளொட் இயக்கத்தின் உயர் இரகசிய முகாமாக எல் முகாம் (L Camp- மூலோபாய தந்திரோபாய முகாம் என அழைக்கப்பட்டது) ஒன்று தமிழகத்தின் கீழைச்சேவல்பட்டியில் இருந்தது. இதற்கு பொறுப்பாயிருந்தவர் தோழர் (!) சேகர் என்பவர். (இவர் மதுரையைச் சேர்ந்தவர். பின்னாளில் இந்திய உளவுத்துறையைச் சேர்ந்தவர் என அடையாளப்படுத்தப்பட்டார்.) சேகர் இரண்டாம் உலகப்போர் சம்பந்தப்பட்ட ஆங்கில நூல்கள் பலவற்றை சேகரித்து வைத்திருந்தார். படித்துத் தள்ளினார். கிட்லர்pன் போர்த் தந்திரோபாயங்களை மிக சிலாகித்து பேசுவார். புளொட் தனது இறுதிப் போராட்டத்தை(!) எடுக்கும்போது எப்படி கடலில் பெருந்தொகையான போராளிகளை ஒரே நேரத்தில் நகர்த்திச் செல்வது என்ற வள்ள வியூகத்தையும்கூட வகுத்தவர். (கவிட்டுக்கொட்டுதலுக்கோ என்னவோ தெரியாது.). இப்படியாய் ஆயுதம் தாங்கிய இயக்கங்களுக்கு கிட்லர் ஒரு நிழல் கீரோவாக இருந்திருப்பாரோ என எண்ணத் தோன்றுகிறது.