கடந்த வாரம் சுவிஸ் தொலைக்காட்சி போலித் துவாரகா விவகாரம் பற்றிய செய்தியை (Rundschau programme) ஓர் ஆவணப்பட வடிவில் வெளியிட்டது. துவாரகா என்ற பெயரோடு 2023 மாவீரர்தின உரை ஆற்றியிருந்த பெண்ணின் படத்தை வெளியிட்டு, அவர் ஒரு ஏமாற்றுக்காரியாகவும் அவரை நம்பி தாம் பணத்தை பறிகொடுத்ததாகவும் பாதிக்கப்பட்ட அல்லது பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் தமிழர்கள் சிலர் கூறியதை வெளிப்படுத்தியது. அதில் வரும் ஒரு தமிழர் தான் 380’000 பிராங்குகளை அவருக்கு கொடுத்ததாகவும் இன்னொருவர் தான் 70’000 பிராங்குகளை கொடுத்ததாகவும் சொல்கிறார். முதலாமவர் அந்த இலட்சக்கணக்கான பணத்தை ஒரு சாதாரண தொழிலாளியாக நேர்மையாக உழைத்து சேமிப்பது என்பது அவரது வாழ்நாள் முழுவதும் உழைத்தாலும் சாத்தியப்பட முடியாத ஒன்று. அத் தொகை அவர் தமிழர்களிடம் சேர்த்த பணமாக இருக்கவே சாத்தியம் உண்டு.
நிதி சேகரித்து பிடிபடுகிற எல்லா பொறுப்பாளர்களும் தப்பித்தலுக்காக எல்லாவற்றையும் அந்த போலித் துவாரகா மீது கட்டிவிட எத்தனிக்கிறார்களா அல்லது அந்தப் பெண் இந்தப் பண மோசடியில் ஈடுபட்டாரா என்பது வெளிச்சத்தில் இல்லை. 70’000 பிராங்குகளை கொடுத்த நபர் இப்போ அதிகாலையில் செய்திப் பத்திரிகைகளை வீடுவீடாக போடுகிற வேலையை செய்துவிட்டு, பின்னர் தனது வேலைத்தளத்துக்கு போய் வேலைசெய்து தான் பெற்ற கடனை அடைக்க வேண்டிய நிலைக்கு உள்ளானதாக சொல்கிறார். அவரது அதிகாலை பத்திரிகை விநியோக கடமையின்போதே அந்த வீதியில் வைத்தே அவரிடம் இதுபற்றி கேட்கப்பட்டது. இதேபோல் இன்னொரு பெண்ணும் தான் 68’000 பிராங்கினை வங்கியில் பெற்று கொடுத்ததாக சொல்கிறார். போலித் துவாரகா தனது பிள்ளை மாற்றுத்திறனாளியாக இருப்பதாக சொல்லி பணம் கேட்டதாகவும் தான் கொடுத்ததாகவும் கூறுகிறார்.
இப்படி வங்கிகளில் பல ஆயிரக் கணக்கில் பலர் கடனெடுத்துக் கொடுத்து தமிழீழத்துக்கான தமது கடமையை செய்வதாக நினைத்துக் கொண்டது உண்மை. அவர்களில் பலரும் தமது கடன்களை அடைக்க இன்றுவரை மிகக் கடுமையாக வேலைசெய்கிறார்கள். அதிகாலையில் பனி குளிர் எல்லாம் தாண்டி நித்திரையிழந்து வீடுவீடாக செய்திப் பத்திரிகைகள் விநியோகித்துவிட்டு, பின் தமது வேலைத்தளத்துக்குச் சென்று நூறு வீத வேலை செய்கிறார்கள். இன்னும் சிலரோ இந்த இரு வேலைகளோடும் வாரத்தில் கிடைக்கும் மிச்ச இரு நாள் லீவுக்கும் முன்றாவது வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்துள் விடப்பட்டிருக்கிறார்கள். அதனால் உடல் உள ரீதியில் பாதிக்கப்பட்டவர்களாக மாறிவிடும் நிலையும் இருக்கிறது. குடும்பங்களில் பிரச்சினைகளும் ஏற்பட்டிருக்கிறது. அதேநேரம் இப்படி உண்மையாகவே பாதிக்கப்பட்டவர்களின் பின்னால் ஒளிந்துகொண்டு இந்தப் பணமோசடியில் ஈடுபட்டவர்களும் பாதுகாப்பான நிலை எடுக்க எத்தனிக்கிறார்களா என்ற கேள்வி மிக முக்கியமானது. இவர்கள் சொத்துக்களை மட்டுமல்ல மிகை ஆடம்பரமாக பிறந்தநாள், பூப்புனித நீராட்டு விழாக்கள் போன்றவற்றை நடத்துவது மற்றும் விலையுயர்ந்த கார்கள் என பவுசு காட்டி அலைய, கடனெடுத்து பணத்தை பெருமளவில் கொடுத்தவர்கள் விடுதலையை நம்பிய ‘குற்றத்திற்காக’ தமது வாழ்க்கையை வேலைக்கு ஒப்புக்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதற்குப் பொறுப்பாக இருந்தவர்கள் யார். இதில் போலித் துவாரகாவின் பாத்திரம் என்ன என்பது பற்றியெல்லாம் தெரியாது. அவரையும் ஊடகவியலாளர் சந்தித்து கேட்கிறார். அவர் தன்மீது பழி போடப்படுவதாகவும் தான் ஒருபோதும் நிதிச் சேகரிப்பில் ஈடுபடவில்லை எனவும் மறுக்கிறார். பணத்தை கையாண்டவர்கள் இந்த பொறுப்புக்கூறலை வெளிப்படுத்த முன்வராமல் எல்லாவற்றையும் அந்தப் பெண்ணின் தலையில் கட்டிவிட்டு தப்பிக்க முனைகிறார்களா என்ற சந்தேகம் எழுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் யாராவது நீதிமன்றம் போக நேர்ந்தால் பல உண்மைகள் கண்டறியப்பட வாய்ப்பு ஏற்படும். இந்த விவகாரம் சுவிஸ் பொலிசாரால் கையாளப்படும் பட்சத்தில் மாவீரர் உரையை தயாரித்ததிலிருந்து அதை ஒளிப்பதிவு மற்றும் ஒலிப்பதிவு என தொழில்நுட்ப வேலைகளில் ஈடுபட்டவர்கள் ஊடாக இதன் சூத்திரதாரியாக நின்றவர்கள் வரை கண்டறியப்படுவதற்கான சாத்தியம் உள்ளது.
புலிகளின் முன்னாள் நிதிப் பொறுப்பாளராக இருந்தவர் அப்***. அவர் எதிர்பார்த்திராத வகையில் ஊடகவியலாளர் அவரை தேடிப்போய்ச் சந்தித்து சில கேள்விகளைக் கேட்கிறார். “மாவீரர் உரைக் காணொளியில் வந்தது பிரபாகரனின் மகள் தான். நான் தொலைபேசியில் அவருடன் உரையாடி இருக்கிறேன். 14 வருடமாக எந்த அரசியல் தீர்வும் வராததால் இனி என்ன செய்யலாம்” என தாம் உரையாடியதாகவும் சொல்கிறார். ஆனால் தான் பணச் சேகரிப்பில் ஈடுபடவில்லை என்கிறார். தொலைக்காட்சிக்குக் கசிந்த அப்***வின் தொலைபேசி உரையாடல் ஒன்று காட்டப்படுகிறது. அதில் அவர் “எமது நாட்டை உருவாக்க வேண்டுமென்றால் அதற்கு பணக் கட்டுமானம் தேவை. அரசியல் ரீதியில் நாடுகளின் ஆதரவுடன் அழுத்தத்தைக் கொடுத்து நாட்டைப் பிரிக்கலாம்” என யாருடனோ உரையாடுகிறார். இதுகுறித்து நேரில் தொலைக்காட்சி நிருபர் கேட்டபோது அப்***வோ “அது நானில்லை” என மறுக்கிறார். தான் யாரையும் நிதிப் பங்களிப்பு கேட்கவில்லை என (ச்ச்)சொல்கிறார்..
இந்த விவகாரம் தொலைக்காட்சிவரை வரும் என்று அவர்கள் எதிர்பாராமல் இருந்திருத்தல் கூடும். வெளியே சொல்லத் தகுந்த எல்லைவரைதான் இச் செய்தியை சுவிஸ் தொலைக்காட்சி பொதுவெளியில் வெளியிட்டிருக்கிறது என ஊகிக்கலாம். தொடர்ந்து என்ன நடக்கப் போகிறது என தெரியாது.
பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும் அவரது மீள் வருகைக்கும் குடும்பத்துக்கும் என அந்தப் பெண் பணம் சேகரித்ததாகச் சொல்கிறது தொலைக்காட்சி. 380’000 பணத்தை கொடுத்து தான் ஏமாந்ததாகச் சொல்லும் நபர் அந்தப் பெண் பிரபாகரன் உயிரோடு இருப்பதாகச் சொன்னதை தான் நம்பி பணத்தை கொடுத்ததாகக் கூறுகிறார். 68’000 பிராங்கைக் கொடுத்த அந்த நபர் (பெண்) தனது பிள்ளை சுகவீனமாக இருப்பதாக (போலித்) துவாரகா உதவி கேட்டதால் கொடுத்ததாகச் சொல்கிறார். இவர்களுக்கு வெளியே இன்னும் பலர் இருக்கச் சாத்தியம் இருக்கிறது. இவ்வாறான பெருந்தொகைப் பண விடயத்தில் இந்த “கேட்டார்… கொடுத்தேன்” என்றவாறான காரணங்கள் அவர்கள் சொல்வதை உண்மையென உறுதிப்படுத்துவதை விடவும் அவர்கள் சொல்லாமல் தவிர்ப்பதை அல்லது மறைப்பதையே அதிகம் வெளிப்படுத்தும் வலுக்கொண்டனவாக இருக்கின்றன. பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்ற கதைவிடல் (போலித்) துவாரகாவிலிருந்து தொடங்கியதல்ல. 2009 இலிருந்தே உருவாக்கப்பட்டு உலவவிடப்பட்ட கதையாடல் அது.
பட்டையடி அடித்து உழைத்த பணத்தையெல்லாம் தமிழீழ மீட்புப் போருக்கான தத்தமது பங்களிப்பாகக் கொடுத்தனர் பல தமிழர்கள். அவர்களின் பணத்தை மில்லியன் கணக்காக சுருட்டி, 2009 புலிகளின் வீழ்ச்சியுடன் தத்தமதாக அபகரித்த பொறுப்பாளர்கள் ஒருவரையொருவர் காட்டிக்கொடுக்க முன்வந்தால் தனக்குத் தானே குழிவெட்டுவதாக அமையும். இந்த கள்ள மௌனமும் கூட்டுக் களவாணித்தனம் அவர்களை பிணைத்து வைத்திருக்கிறது.
புலிகளின் வீழ்ச்சிக்கு புலத்துப் புலிகளின் நடவடிக்கைகள் மட்டுமல்ல புலம்பெயர் புலிகளின் பீடமும் அரசியல் ரீதியில் பெரும் பங்கு ஆற்றியது. நந்திக் கடலுக்கு அமெரிக்கக் கப்பல் வந்து மீட்கும் என தலைமைக்கு நம்பிக்கை ஊட்டுமளவுக்கு, அதை நம்புமளவுக்கு விடுதலை அரசியலானது புலத்திலும் புகலிடத்திலும் பலவீனமாக இருந்தது. நிதிப் பொறுப்பாளர்கள் 2009 இல் அவசரகால நிதி என்ற பேரில் பெருநிதியை சேர்த்தனர். அதுக்கு என்னவானது எனத் தெரியாது. ஒருவகையில் இந்தக் கும்பல் அந்தப் பணத்தை தமதாக்கிக்கிக் கொள்ள புலிகளின் அழிவை கள்ளமாக விரும்பினார்கள் என்ற கடுமையான விமர்சனத்தை இவர்கள் குறித்து ஒருவர் முன்வைக்க முடியும்.
இந்த புலம்பெயர் புலிகளின் பணம் சேர்க்கும் வழிவகைகள், கையாடல்கள் என்பன குற்றத்தன்மை வாய்ந்ததாக அமைந்தது என மதிப்பிடலாம். இந்தக் குற்றத்தன்மையானது சர்வதேச நாடுகள் தமது நலன்களின் அடிப்படையில் எமது போராட்டம் குறித்த எடுத்த நிலைப்பாட்டில் அவர்களது சூழ்ச்சிகரமான பூகோள அரசியலை மறைக்க உதவியது. அதாவது புலிகளின் ஆயுதப் போராட்டம் குற்றத்தன்மை கொண்டதாக சர்வதேச ரீதியில் ஆக்கப்பட்டதற்கு புலிகளின் குற்றத்தன்மை வாய்ந்த நடவடிக்கைகள் சாதகமாக அமைந்தது.
எண்ணிலடங்கா மக்களினதும் போராளிகளினதும் அர்ப்பணிப்புகளும் தியாகங்களும் பங்களிப்புகளும் கொண்டு போராட்டம் வரலாறாகிக் கொண்டிருந்த அதேநேரம், புலிகளின் தோற்றத்திலிருந்து அதன் அழிவுவரை அவர்கள் மேற்கொண்ட தனிநபர் அழிப்பு, கூட்டுக் கொலை, மாற்று இயக்க அழிப்பு, உட்கொலை, சக இனங்கள் மீதான தாக்குதல்கள் கொலைகள், மாற்றுக் கருத்தின்மீதான அராஜகம் மற்றும் ரஜீவ்காந்தி, பிரேமதாச இருவரையும் கொன்றமை என அவர்களது நடவடிக்கைகள் குற்றத்தன்மை கொண்டதாகவும் வளர்ந்துகொண்டுமிருந்தன. இந்த குற்றத்தன்மைப் போக்கின் நீட்சியாக புகலிட புலிகளின் குற்றத்தன்மையான செயல்களை நோக்க முடியும். அது புகலிடத்தில் மாபியாத்தனமான நடவடிக்கைகளுக்கும், எவ்வழியிலாவது பணம் சேர்க்கும் முனைப்புகளுக்கும் இட்டுச் சென்றது.
2009 புலிகளின் அழிவின் பின்னரும் தொடர்ந்து பணம் கறக்கும் வேலைக்காகவும், கொள்ளையடித்த பணத்தை எவரும் கணக்குக் கேட்டுவிடக்கூடிய கொதிநிலையை படிப்படியாக இல்லாமலாக்கும் கள்ள நோக்குடனும் (பிரபாகரன் கொலையுண்டது தெரிந்தும்) “தலைவர் உயிரோடு இருக்கிறார்” எனக்கூறி அவரை மாவீரராகக்கூட அறிவிக்காமல் இழுத்தடிக்குமளவுக்கு இவர்களின் குற்றத்தன்மையான மனநிலை இவர்களை வழிநடத்தியிருக்கிறது. இதற்கு தமிழக தமிழின உணர்வாளர்கள் சிலர் பிழைப்புவாத நோக்கில் துணைபோயினர்.
ஒருபுறத்தில் விடுதலை அரசியல் செயற்பாடுகள் நிகழ்த்தப்பட்ட அதே நேரம், இன்னொரு புறத்தில் கிரிமினல்தன்மை கொண்ட போக்கும் அதன் தொடர் வளர்ச்சியும், முடிவும் போராட்டக் குணத்தை முழுமையாகச் சிதைத்து, நம்பிக்கையைச் சிதைத்து, அரசியல் நீக்கம் செய்யப்பட்டவர்களாக ஈழத் தமிழ் மக்களை ஆக்கியிருக்கிறது.
- 23062024
- Thanks: SRF
- Link: https://www.srf.ch/play/tv/rundschau/video/spendenaffaere-um-tamil-tigers-lebt-der-anfuehrer-noch?urn=urn:srf:video:ff1fd8c5-b11e-47cf-9b1f-96a1828a73b0 (இச் செய்தியில் 33 வது நிமிடத்தின்பின் குறித்த காணொளி வருகிறது.

