இன்றும் வீடுதிரும்புதல் சாத்தியமாகிப்போக
உறவுப் பார்வைகள்
அசைந்து முளைக்கின்றன.
வீதியில்
போர்வண்டி ஒலிதேய்ந்து மறைகிறது, இருளில்
பயத்தை விட்டுச் சென்றபடி.
இன்றைய வியூகத்தின் பின்னான
முகாம்திரும்புதலில்
நிம்மதியுறுகிறான் இராணுவ வீரன்.
துப்பாக்கி இப்போ சுமையாகிப் போய்
பிடிநழுவுகிறது.
இன்றைய தனது முறையில்
குண்டுகளை அணிகிறது, வெடித்துச்
சிதறுதற்காய் ஓர் பிஞ்சு – அதன்
உடல் மனசிலிருந்து அறுபடுதற்காய்
குலைகிறது.
திரும்புதல் என்பது சாத்தியமேயில்லை.
மரணவேதனையின் வாசற்படியில் ஒரு தாய்
ஏந்திய உயிர் வீரிடுகிறது.
இரத்தமும் சதையுமான பொசிவில், ஒரு
படைப்புமையின் பெருமிதமாய்
அவள் உடல் வலுப்பெறுகிறது.
மரணத்தை இந்தப் பெருமிதம்
கொண்டாடுவதேயில்லை.
ஒரு கிளி, கூண்டு, கதவு, பூனை
இவற்றோடு
நீலம், பச்சை, சிவப்பு என நிறங்கள்
எல்லாமே சிதறிக்கிடக்கிறது ஒரு படைப்புமைக்காய்.
குழந்தை இவற்றை எப்படி
அமைத்துக் காட்டப் போகிறது எனக்கு?
முன்னால்
வரைவுகளும் புனைவுகளும் கொண்ட நான்!
-ரவி (03112006)