காய்ந்து உலர்ந்து வரண்டு
இந்தக் காகிதத் துண்டு இப்போதும்
பச்சைப் புல்லிடை கிடக்கிறது.
இல்லை வாழ்கிறது.
ஒவ்வொரு முறையும். அது
கண்ணில் எத்துப்படத் தவறுவதேயில்லை.
காய்ந்து உலர்ந்து வரண்டு
இந்தக் காகிதத் துண்டு வாழ்கிறது.
முகில்களில் குரங்கேறி குதறி
பனிப்பஞ்சை உதிர்த்துக்
கொட்டிய பிரளயத்தில் இந்தக் காகிதத் துண்டும்
அலங்கோலமானது, மூடுண்டது.
திரள்திரளாய்க் கொட்டி
பனிமண்டலக் கோளாய் இந்த மண்ணை
மாற்றிய பனிக்காலம் உருவழிந்தது தற்காலிகமாய்.
மரங்கள் இலைசூடிக்கொள்ள முயற்சித்த
மீள்பொழுதில் மீண்டும் பிழைத்திருந்தது
காகிதத் துண்டு, பச்சைப் புல்லிடை.
பழுத்துப்போய்
தீயின் நா நக்கிய துண்டமாய்
ஒவ்வொரு பிரளயத்தின் பின்னும் மீண்டும் மீண்டுமாய்
காய்ந்து உலர்ந்து வரண்டு
வாழ்ந்துகொண்டுதானிருக்கிறது, ஒரு தொன்மம்போல.
குண்டுகளோடு வெடித்துச் சிதறுவதும்
படுகொலைகளின் மொழிகளும்
செய்திகளாய்
நிகழ்காலத்திலேயே தொன்மங்களாய் மாறுகிறது.
அவ்வளவு வேகம் துரிதம் வீச்சு போர்களுக்கு.
காய்ந்து உலர்ந்து வரண்டு
இந்தக் காகிதத் துண்டு வாழ்ந்துகொண்டிருக்கிறது.
தாய்மார்கள் கண்ணீரால் சவப்பெட்டிகளை
கழுவிக்கொண்டிருக்கிற காட்சிகளை
கொலைநயமாய் நிறநிறமாய்
வழுவழுப்பான தாள்கள் நிறைத்தபடிதான்
நீள்கிறது…போ!
– ரவி (09042006)