வேடனை விடுதலை செய்யுங்கள்

நான் பாணன் அல்ல
பறையன் அல்ல
புலையன் அல்ல
நீ தம்புரானுமல்ல.
ஆயிலும் நீ ஒரு மயிருமல்ல!

வேடனின் தாயார் ஈழத்திலிருந்து தமிழகத்துக்கு வந்த அகதி. தந்தையார் விளிம்புநிலை மனிதன். அவரது ஊர் கேரளத்தில் உள்ளது. இருவரும் மதுரையில் சந்தித்து காதலித்து குடும்பமாகின்றனர். பின் திருச்சூர் (கேரளா) திரும்புகின்றனர். சேரிப்புற வாழ்வு அவர்களது. வேடன் (ஹிரன் தாஸ் முரளி) அங்குதான் பிறக்கிறான். தாயார் இப்போ இவ் உலகில் இல்லை.

வேடன் ஒரு மக்கள் கலைஞனாக இன்று தன்னை உயர்த்தியிருக்கிறான். அவனது வலி ஈழத் தமிழனின் வலியல்ல. யாழிலிருந்து அகதியாய்ப் பெயர்ந்த தாயின் வலியை அவன் கேட்டு அறிந்திருக்கிறான். தந்தையின் மீதான சாதி ரீதியிலான ஒடுக்குதலையும் தமது விளிம்புநிலை வாழ்க்கையையும் அவன் வாழ்ந்தனுபவித்து உணர்ந்திருக்கிறான். ஒரு இளம் உள்ளத்தில் எதிர்காலம் குறித்து இயல்பாகவே விரியும் கனவுகளை துவம்சம் செய்கிற இந்த சமூக அமைப்புமுறையை, குறிப்பாக சாதிய ஒடுக்குமுறையை, அதன் கொடிய முகத்தை, அவைகள் தந்த வலியை அவனும் அனுபவித்தான். இதுவே அவனது கேள்விகளினதும் சிந்தனைகளினதும் விளைநிலம். பாடல்களின் வரிகளில் அவை பட்டுத் தெறிக்கின்றன.

Continue reading “வேடனை விடுதலை செய்யுங்கள்”

போக்காளி (நாவல்)

ஒரு போரின்போது மக்கள் அல்லோல கல்லோலப்பட்டு நாட்டுக்குள் மாறிமாறி இடம்பெயர்கிறார்கள். அயல் நாட்டுக்கு இடம்பெயர்கிறார்கள். தூர தேசங்களுக்கு இடம் பெயர்கிறார்கள். இலங்கையிலும் போர் துரத்திய தமிழ் பேசும் மக்கள் இவ்வாறே ஆனார்கள். மேற்குலகுக்கு புலம்பெயர்ந்தோர் எல்லோரும்அரசியல் அகதிகளா பொருளாதார அகதிகளா என பலர் கேள்வி எழுப்புவதுண்டு. வெறும் பொருளாதாரக் காரணிகளால் போர்ப் பிரதேசத்திலிருந்து மேற்குலகுக்கு இடம் பெயர்பவர்களை அரசியல் அகதிகள் எனலாமா என்ற விவாதம் இங்கும்கூட நடைபெறுகிற ஒன்று. பொருளாதாரப் பிரச்சினை என்பதும் ஓர் அரசியல் பிரச்சினைதான் என்ற எதிர்வாதமொன்றும் வைக்கப்படுவதுண்டு. (எனக்கு இதில் உடன்பாடு உண்டு).

இந் நாவல் இதற்கான ஒரு விடையை தருகிறதாக எனக்குப் படுகிறது. பொய்யாக ஒரு கதையைச் சொல்லி தாம் நேரடியாக இராணுவத்தாலோ புலிகளாலோ பாதிக்கப்படுவதாகக் கூறி சாதித்தாலொழிய அரசியல் தஞ்சம் கேள்விக்குள்ளாகிவிடும். அப்படியாக அகதி வாழ்வைத் தொடங்குபவர்கள் -தாம் விரும்பினாலும்கூட- தனி பொருளாதாரக் காரணிகளை நிவர்த்திக்கும் வேலையில் மட்டும் பயணிக்கவே முடியாமல் போகிறது. அது ஈழப் போராட்ட அரசியலை, அதன் சிந்தனை முறையை இழுத்துக்கொண்டுதான் பயணிக்கிறது. அது அவர்களின் புதிய வாழ்வியலையும் பாதிக்கிறது. நவமகனின் போக்காளி என்ற இந்த நாவல் அதை சிறப்பாக வெளிக் கொணர்கிறது.

Continue reading “போக்காளி (நாவல்)”

கொடுந் துயரம்

பகடிவதையின் மனவக்கிரம் ஒரு பல்கலைக் கழக மாணவனை தற்கொலை செய்ய வைத்த காலம் காயுமுன், கண்டியை பிறப்பிடமாகக் கொண்ட பதினாறு வயது பாடசாலை மாணவி ஒருத்தி தற்கொலை செய்கிறாள். இவை தற்கொலை என்ற வகைமைக்குள் அட்டவணைப்படுத்தப் படலாம். ஆனால் யதார்த்தத்தில் இவைகள் கொலைகள்.

அந்த மாணவன் நிர்வாணமாக நிறுத்தப்பட்டு ஒரு கும்பல் வன்முறை வக்கிரத்தின் நடுவில் சுழன்றோட விடப்படுகிறான். இங்கு இந்தச் சிறுமியை தனியார் வகுப்பில் (ரியூசன்) மாணவர்களுக்கு நடுவில் வைத்து அவமானப்படுத்துகிறான் ஒரு ஆசிரியப் பதர். இரண்டுமே பாலியல் வக்கிர மனோபவாவமும், அவமானப்படுத்தி இரசிப்பதுமான ஆணாதிக்க மனக்கட்டமைப்பு நிகழ்த்திய கொலைகள்.

Continue reading “கொடுந் துயரம்”