நான் படித்த பாடசாலைக்கு சுமார் 100 மீற்றருக்குள் கடலில் அலைகள் ஓயாது நீந்திக்கொண்டிருக்கும். அவை நீர்த்திவலைகளை பாறைகளின் மேல் அள்ளி வீசியபடி இருக்க, நீர்மேவி வரும் காற்று சிலிர்த்தெழுந்து அலையின் ஓசையை எனது பாடசாலைவரை காவிவரும். எமது இரசனைக்காக ஏங்குவதுபோல் அலைகள் மூச்செறிந்து அழைக்கும் ஓசைக்கு எதிர்த்திசையில் நடந்து பக்கத்து கோவிலின் தேர்முட்டிப் படியில் எமது மதிய உணவை உட்கொள்வோம். மூடி தனியே அகலா அந்த சதுர பிளாஸ்ரிக் பெட்டியை அரசமர சலசலப்புக்குக் கீழே வாசனையை முகரத் துடிக்கும் காற்றினை விலத்தி, திறந்து சாப்பிட்டுக்கொண்டிருப்போம்.