ஐயர் (கணேசன்) இன் நூல்
– தாமதமான வாசிப்பு

1985 ஆரம்பகாலப் பகுதி. கருக்கல் பொழுது. எமது ஊர் அதிகாலை இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டது. செய்தி ஒரு உட்புயலாக ஊருக்குள் வேகமாக பரவுகிறது. முதலில் வாசிகசாலை மையத்துக்கு ஓடுகிறேன். அங்கு மற்றைய நண்பர்கள் பரபரப்புடன் நிற்கிறார்கள். எல்லோருமாக சுற்றிவளைப்பின் கெடுபிடியை கடப்பு ஒன்றினூடான பதுங்கிக் கடந்து அயல் ஊருக்குள் ஓடிக்கொண்டிருந்தோம். பயிற்சி எடுத்தவன் எடுக்காதவன் ஆதரவாளன் என அந்த இளைஞர் குழாம் பல இயக்க வாடையை காவியபடி பறந்துகொண்டிருந்தது. கையில் ஒரு பிஸ்ரலுடன் ரெலோ இயக்க போராளி ஒருவன் எம்முடன் ஓடிக்கொண்டிருந்தான். “என்னடாப்பா நாமதான் ஆயுதமில்லாமல் ஓடுறமெண்டால் நீ ஆயுதத்தோடை ஓடுறாய்” என கடித்தேன் நான். அவன் சிரித்தபடியும் ஓடிக்கொண்டும் சொன்னான் “ இந்த ஜே.ஆர் க்கு பகிடி வெற்றி தெரியாது. சும்மா பேச்சுக்கு தமிழீழம் எண்டு கேட்டால் அதுக்கு இப்பிடியே கலைக்கிறது என்றான். எனக்கு என்னவோ இன்றுவரை இதற்குள் சிந்தனையை கிளறுகிற ஒரு அரசியல் இழை பின்னியிருப்பதாகவே படுகிறது.