வெறுக்கிறேன்!

உணர்ச்சிவசப்படாதே என அறிவுரை கூறுவோர் மீது
வெறுப்பு வருகிறது,
உணர்ச்சி அறிவுக் கண்ணை மறைக்கும் என்பவர் மீதும்தான்!

உணர்ச்சிகளற்ற உடலும் மனமும் இறந்துபோவதற்குச் சமம்.
அறிவற்ற உடலுக்கு இந்த துரதிஸ்டம் வாய்ப்பதில்லை.
மகிழ்ச்சி கோபம் அழுகை சந்தோசம் என எல்லாமும் அறிவினுள் இருப்பதில்லை.
ஆதலால் நான் உணர்ச்சிவசப்படுவதை சுகிக்க ஆவலாக இருக்கிறேன்.

அதற்குள் ஓர் “மன்னிப்பு” என்ற வார்த்தை உறங்கியிருத்தல்கூடும்.
அது அறிவின் அளவுகோலால் ஆனது.
மனதின் ஆழத்திலிருந்து எழுந்துவரும் அந்த வார்த்தை ஒரு பிரசவத்தின் தொப்பூழ்க் கொடியோடு வாயிலிருந்து வெளிவருதலில் ஓர் உயிர் இருக்கும். அருகாமை இருக்கும்.
ஆதலால் அறிவையும் நான் சுகிக்க ஆவலாக இருக்கிறேன்.
அறிவையும் உணர்ச்சியையும் எதிரணியில் நிறுத்தும் உங்கள் வார்த்தைகளை நான் வெறுக்கிறேன்.

ஆசைப்படுகிறேன்

கிழக்கு என எதை நீ அறிவிக்கிறாயோ அது எனக்கு மேற்காய்த் தோன்றுகிறது
சூரியன் கிழக்கில் உதிப்பதாக நீ அறிவிக்கிறபோது அது மேற்கிலிருந்து எழுவதாய்த் தோன்றுகிறது.
ஒரு மாலைநேர சூரியன் இழுத்துப் போட்டிருக்கிற வானம் எனக்கு காலைக் காட்சியாகத் தோன்றுகிறது.
தோன்றுதல்களுக்காய் எனை நீ தண்டிக்கவும் செய்கிறாய்.
சொல்லித்தரப்பட்டவைகளை உன்போலவே நானும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என விதிக்கிறாய்.
அதை என்னுடன் எடுத்துச் சென்று அடுத்த சந்ததியிடமும் கையளித்துக் கொண்டே இரு
போதித்துக் கொண்டே இரு என்கிறாய்.
கடவுளைக் காட்டி மிரட்டுகிறாய்.
மறுபிறவியைச் சொல்லி மிரட்டுகிறாய்
இருளைக் காட்டி மிரட்டுகிறாய்.
இருளற்ற வெளியில் ஒளிக்கு அர்த்தமேது
மனிதர்களற்ற உலகில் கடவுளுக்கு அர்த்தமேது.
வாழ்தல் அற்ற உலகில் மறுபிறவிக்கு அர்த்தமேது
யதார்த்தத்தை நம்பிக்கைகளால் இடம்பெயர்த்தல்தான் நீ கண்டுசொல்லும் வாழ்வு எனில்,
அது எனக்குத் தேவையில்லை.
மனதின் பிரபஞ்சத்தில் சுழன்று திரிய
நான் ஆசைப்படுகிறேன்.

பெப்ரவரி-4

இந்தக் கொடியை நான் எரிப்பதாயில்லை.
எரிப்பதாயின் முதலில் என் இலங்கை கடவுச் சீட்டை எரித்தாக வேண்டும்.
இந்தக் கொடியை நான் ஏற்றுவதாயில்லை.
ஏற்றுவதாயின் முதலில் பேரினவாதத்தை அவர்கள் இறக்கியாக வேண்டும்.
இந்தக் கொடிக்கு நான் நிறங்களும் தீட்டுவதாயில்லை.
தீட்டுவதாயின் முதலில் அவர்கள் என் தூரிகையைத் தரவேண்டும். !

Continue reading “பெப்ரவரி-4”

என்ன நடக்கிறது, இந்த உலகில்?

என்ன நடக்கிறது, இந்த உலகில்?
பல விடயங்கள் தெரியாது என
நினைத்திருந்தேன் – இப்போ,
எதுவுமே தெரியாது என உணர்கிறேன்.
வெளவாலை கூண்டில் நிறுத்தினார்கள்
வூகானை பிசாசுகளின் தீவாக அறிவித்தார்கள்
உலகின் வைத்தியசாலைகளில் மரணங்களை
திரையில் காட்சியாக்கினார்கள்.
என்ன நடக்கிறது, இந்த உலகில்?

Continue reading “என்ன நடக்கிறது, இந்த உலகில்?”

2022

இந்த வருடமும் கடந்து போகிறது
இன்றைய திகதியை வாசித்து முடிக்கமுன்னே அது
மற்றைய பக்கத்துக்கு திரும்பிவிடுகிறது -அது
குப்பைக் கூடையுள் நிறைவேறாத ஆசைகளுடன் மரணித்துவிடுகிறது.
ஒவ்வொரு நாளும்,
வேலைத்தளம் தூண்டில் போட்டு இழுக்கிறது.

Continue reading “2022”

வருவதாயில்லை!

எனது கல்வி தகைமையைக் கேட்கிறாய்,
கொடுப்புக்குள் சிரிக்கிறாய்.
என்னருகில் நின்று உயரத்தைப் பார்க்கிறாய்,
நீ உயரம் என்கிறாய்
மயிரற்றுப்போன எனது தலையைப் பார்த்து
உனது முடியை கோதிவிடுகிறாய்.

Continue reading “வருவதாயில்லை!”

பனி பொழிந்த நிலம்

வெண்முகில்களை சீவி
துருவலாய்க் கொட்டிக்கொண்டிருந்தாள் அவள்.
இலைகள் சருகுகளாய் உதிர்ந்து கொட்டியிருந்தபோது
மரங்கள் தமது அர்த்தத்தை இழந்திருந்தன – அப்போ
எனது கமராவை நான் உறைக்குள் புதைத்திருந்தேன்.
இப்போ உறைக்குள்ளிருந்து உருவி எடுத்தேன்.

Continue reading “பனி பொழிந்த நிலம்”

வெறுமை

நிலாவொளியை இரகசியமாய் முத்தமிட்டு

கிறங்கிப் போய்விடுகின்ற

கடல் அலைகளின் கள்ள அசைவுபோல்

அவளின் தோல் சுருக்கங்களுக்கு இடையே

வாழ்ந்துபட்ட அனுபவம் துலங்கிக்கொண்டிருந்தது.

தன்னைத் தாங்குவதில் மூன்றாவது காலாய்

ஒரு கைத்தடியைத் தன்னும் அவள் மறுத்திருந்தாள்.

அனுபவத்தின் பாரம் அவளை

மெல்ல நடந்துகொள்ள அனுமதித்தது.

காணும்போதெல்லாம்,

ஒரு புன்னகையை அவள் சிந்தியபடி

எனை எதிர்கொள்வாள்.

எனது கைமணிக்கட்டை பிடித்து பேச தொடங்குவாள்.

எனது அவசரம் மணிக்கட்டின் பிடியை கடிந்துகொள்வதால்

செல்லுபடியாகிற ஒரு காரணத்தோடு

ஒவ்வொரு முறையும் அவளை கடந்து செல்வேன்.

என்றாவது ஒருநாள்

அவளுடன் ஆறஅமர இருந்து பேச வேண்டும்.

அவள் காட்டுகிற இன்னொரு உலகத்தை தரிசித்துவிட வேண்டும் என்ற

கனவு எனது அறிவின்மையால் கலைந்து போனது.

அவள் தனியாக வாழ்ந்து கழித்த அறை

வெறுமையாய்க் கிடந்தது.

கிவிதை

வானவில்லொன்று விழுந்துகிடப்பதாய்
அதை நோக்கி ஓடிக்கொண்டிருந்தனர் அவர்கள்.
முற்றத்தில் வீழ்ந்து கிடந்த அந்த வானவில்லை குழந்தை
நிறநார்களாய்க் கிழித்துப் போட்டுக்கொண்டிருந்தது.
பிஞ்சுக் கைகள் அளைந்த நிறங்கள்
முகத்திலும் சிதறிட
ஓவியமாகிவிட்டிருந்தது குழந்தை.
எரியுண்ட வாழ்வின் நிறங்கள் கருகுண்டு
நாட்கள் பட்டுப்போயிருந்தன.
நிறமற்றுப்போன முகங்களுடன்
குடிசையின் வாசல்களில் திண்ணைகளில்
அவர்கள் இருந்தார்கள்.
இன்று இந்த முற்றத்தில்
நிறங்களை சிந்திவிளையாடும் குழந்தைக்குள்
அவர்கள் புகுந்துகொண்டார்கள்.
இன்றைய இரவில் நான் ஒரு கவிதையை எழுதிட வேண்டும்.
“ஒரு கவிதை கிவிதையைத்தன்னும் எழுதித்தா” என்றவனின் தொல்லை இனியாவது இல்லாமலாகிட வேண்டும்.
அதற்கான கனவுடன் நான் உறங்கியிருந்தபோது
எனது கனவோ தனக்கான கனவை தேடிக்கொண்டிருந்தது.
கனவின் கனவோ குயில்களின் இசைப்பில் கரைந்தழிகிற
அதிகாலை இருளை காண ஆசைப்படுகிறது.
ஆனாலும் காகங்கள் கரைகிற காலைதான்
தனக்கான கனவில் திரும்பத் திரும்ப வருவதால்
எனது கனவு என்னை குப்புறப் படுத்து
தொடர்ந்து தூங்கும்படி மன்றாடியது.
அப்படியேதான் கிடக்கிறேன், குப்புற!
(april2016)

சுடர்கதை

hand-over-candle-1495809
நான் உருகிக்கொண்டிருக்கிறேன் அதை
எனது சுடரொளியில் நீ கவனிப்பதேயில்லை.
உனது முகத்தை நான் அவதானித்துக்கொண்டுதான் இருக்கிறேன்.
புறம்காட்டி நீ செல்கிறபோது அணிகிற முகமூடியை
நான் கண்டுகொண்டுவிடக் கூடாது என
எச்சரிக்கையுடன் இருக்கிறாய்.
தெரிகிறது.

Continue reading “சுடர்கதை”