இலங்கையின் இயற்கை அழகின் திரட்சி மலையகம். அதை இப்படியான செழிப்பு பூமியாய் மாற்றி இலங்கையின் அந்நியச் செலாவணியின் முக்கால் பங்கிற்கு மேலான வருமானத்தை ஈட்டித்தருகிற அந்தப் பூமியின் மக்கள் காலாகாலமாகவே திட்டமிடப்பட்ட விதத்தில் ஏழையாக, விளம்புநிலை மக்களாக வைக்கப்பட்டு சுரண்டப்படுகிறார்கள்.
ஒட்டுமொத்த இலங்கையையே தாங்கிப்பிடிக்கிற இந்த பொருளாதாரத்தில் – அதாவது அவர்களின் சந்ததி சந்ததியான உழைப்பில்தான்- இலவச கல்வி, இலவச மருத்துவம் எல்லாமும் இன்றுவரை சாத்தியமாக இருக்கிறது. இதை அனுபவித்து படித்து ஆளாகிவர்கள் நாம். அதிகாரங்களிலும் வசதிவாய்ப்புகளிலும் வாழ்வின் சுகிப்புகளில் -ஏற்றத்தாழ்வோடு- மையப் பகுதியிலும் அதையண்டிய பகுதிகளிலும் பரந்து விரிந்து இருக்கும் நாம் இந்த விளிம்புநிலை மனிதர்களை கண்டுகொள்வதில்லை. குற்றவுணர்வு கொள்வதில்லை. அவர்களை ஏழைகள் என்ற தளத்திலும் விம்பத்திலும் மட்டும் வைத்துப் பார்த்து, அதிகபட்சம் இரக்கப்பட்டுவிட்டு நகர்பவர்கள்.
காடாய்க் கிடந்த அந்தப் பூமியை அதன் இயற்கை வளத்தை கடினமான உடலுழைப்பால் கண்டெடுத்து இலங்கைக்கு வழங்கியவர்கள் அவர்கள். அவர்களுக்கு நாம் உதவுவது என்ற அடிப்படையிலன்றி எமக்கு எழுகிற குற்றவுணர்வின் அடிப்படையில் நாம் இந்த மிகக் குறைந்த அடிப்படையானதும் உடனடி தேவையானதுமான வாழ்வாதார பகிர்வை செய்ய முன்வந்திருக்கிறோம். அதை செய்யும் அமைப்புகள் தனிநபர்களின் வரிசையில் நாமும் ஒருவராக இருப்போம்.
*
தற்போது எதிர்பாராமல் ஏற்பட்டுள்ள கொரோனா நிலைமையால் இலங்கையில் ஊரடங்கு சட்டம் தொடர்கிறது. இதனால் அன்றாடங்காய்ச்சிகளாய் இருக்கும் விளிம்புநிலை மக்கள் மோசமான நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். கொரோனாவை விடவும் பசி அவர்களை அச்சுறுத்துகிறது. தினக்கூலி வேலைகள் இல்லாமல் போனதால் இந்த நிலைமை உருவாகியுள்ளது. எம்மைப் பொறுத்தவரை ஒப்பீட்டளவில் மலையகம் மிக மோசமான நெருக்கடியை சந்தித்துள்ளது. தேயிலைக் கொழுந்து கொய்வது நிறுத்தப்பட்டிருப்பதாலும் கூலிவேலைகளுக்கு போக முடியாததாலும் அவர்களுக்கு எந்தவித வருமானமும் இல்லாமல் போயுள்ளது. பசியில் வாடும் நிலை தோன்றியுள்ளது. அதனால் ஆதரவு அமைப்பு முதற்கட்டமாக 2000 பிராங் (சுமார் மூன்று இலட்சத்து எண்பதினாயிரம் ரூபா) நிதிக்கு அளவான உணவுப் பொதிகளை சுமார் 140 பயனாளிகளை தேர்ந்தெடுத்து வழங்கும் வேலையில் இறங்கியுள்ளது. தமிழ் சிங்கள தோட்டத் தொழிலாளர்களில் தனித்துவாழும் தாய்மார்களுக்கும் பெண்தலைமைத்துவக் குடும்பங்களுக்கும் முன்னுரிமை வழங்கியிருக்கிறோம்.
வூட்டன் எஸ்ரேற், ஹரிங்டன் எஸ்ரேற், ட்றெயிற்றன் எஸ்ரேற் பாக்கியபுரம், சமாதானபுரம், தர்மபுரம், சௌமியபுரம், அமைதிபுரம் பிராந்தியங்களில் முடிந்தளவுக்கு தேர்வுசெய்து வழங்கிவருகிறோம்.
மலையகத்தில் சுயமாக இயங்கும் “தனித்துவாழும் பெண்களுக்கான அமைப்புடன் (Single Mothers Empowerment Unity) இணைந்து, எமது “ஆதரவு அமைப்பு” (சுவிஸ்) இப் பணியை முன்னெடுத்திருக்கிறத(Single Mothers Empowerment Unity) இன் உதவியுடன் எமது “ஆதரவு அமைப்பு” (சுவிஸ்) இப் பணியை முன்னெடுத்திருக்கிறது. அந்த அமைப்பின் நண்பர்களான கிங்ஸ்லி, சந்திரலேகா, ஹேரத் ஆகியோர் இக் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களதும் அவர்களின் பிள்ளைகளினதும் பாரிய உழைப்பு இந்த திட்டத்தை ஒரு முறைமைக்கு உட்படுத்தி நடைமுறைப்படுத்துவதை சாத்தியமாக்கியுள்ளது. அத்தோடு உதவிப் பணிக்கான இணைப்பாளர்களாக செயற்படும் செலின் தவமணி, சரத் குணசிறி, சண்முகராஜா,கஜன் தனராஜ் (Stonycliff) போன்றவர்கள் மலையகத்தில் இவ் விநியோகப் பணியை செய்துமுடிப்பதில் உதவியாக இருக்கின்றனர். அவர்களது வீட்டில் வைத்தும், வேறு பொது இடங்களிலும், சிலருக்கு தனியாக வீட்டுக்கும் என விநியோகத்தை செய்கிறோம்.
ஊரடங்கு சட்ட நிலைமைக்குள்ளும் கொரோனா எச்சரிக்கை நிலைமைக்குள்ளும் இப் பணி செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. பொலிசார் ஊரடங்கு நேரத்தில் இதை செய்வதற்கான அனுமதியை வழங்கியுள்ளனர். ஊரடங்கு முடியும்வரை கட்டங்கட்டமாக இதை நாம் தொடர எண்ணியுள்ளோம்.
அதன் பிறகு மலையகத்தில் எமது ஆதரவு அமைப்பு வேலைமுறைமையிலான எமது செயற்பாட்டை தொடங்க உள்ளோம். எமக்கு தொடர்ந்து நிதி அன்பளிப்பு செய்துவரும் ஆதரவு நண்பர்கள் அனைவருக்கும் இங்கு மீண்டும் நன்றியைத் தெரிவத்துக்கொள்கிறோம். வழமைபோலவே ஆதரவு.கொம் இணையத்தளத்தில் இன்னும் சில தினங்களில் கணக்கு விபரங்கள் பொதுவெளியில் முன்வைக்கப்படும்.
பொதியின் பெறுமதி 2431 ரூபா ஆகும்.
அரிசி 10 கிலோ
மா 5கிலோ
சீனி 2 கிலோ
உ.கிழங்கு 1 கிலோ
வெங்காயம் 1 கிலோ
பருப்பு 1 கிலோ
சோயா 250 கிராம்
கோல்ட் மெரி பிஸ்கற் 1
டெற்றோல் சோப் 2
எமது ஆவணப்படுத்தலுக்காக எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.
(புகைப்படங்களில் பயனாளர்களின் அடையாளம் (முகம்) மறைக்கப்பட்டிருக்கிறது)