இன்றைய ஊரடங்கு நிலை ஈழத்தில் ஏற்படுத்தியுள்ள நிலை அன்றாடங்காய்ச்சியாய் உள்ள மக்களை பெரிதும் பாதித்திருக்கிறது. கொரோனா பற்றிய பயத்தை மேவுகிற விதத்தில் பசி அவர்களை வாட்டுகிறது. தினக் கூலித் தொழில் தடைப்பட்டுள்ள நிலையில் வீட்டுக்குள் முடங்கி இருக்க வேண்டிய நிலை. தொழில் இல்லை. பசியாற எதுவுமில்லை. வயோதிபர் குழந்தைகளின் நிலை இன்னும் மோசமாகியுள்ளது. அரசாங்க நிவாரணம் அரசியல் பாதையினூடாக எவரெவரை போய்ச் சென்றடைகிறது என்பது தெரியாது. இதற்கு உதவ இயலுமானவர்கள் முன்வர வேண்டும். இதற்கு புகலிடத் தமிழர்களும் நாட்டிலுள்ளவர்களும் உதவி அமைப்பு வடிவத்துக்கான ஒரு தேர்ந்த முறைமையை (sytem) வைத்திருப்பது அவசியம். மிகச்சிறு பகுதியினர் இதற்குள் ஆரோக்கியமாக இயங்குவதை அறிந்திருக்கிறேன். திடீர் அனர்த்தங்களின் போதான உதவி அமைப்பு ஒரு தற்காலிகமான (OK அமைப்பு என்பர்) அமைப்பாக இருத்தலும் சாத்தியமானது.
புகலிடத் தமிழர்கள் சார்பிலான பதிவல்ல இது. அவர்களில் பெரும்பாலானோரும் நுகர் கலாச்சாரத்தை மையப்படுத்திய வாழ்வுள் உழல்கின்றனர். உறவினர்களை நண்பர்களை காணும் பேரவாவுடன் இருந்த நிலை மாறி, இலங்கையை ஒரு மலிவான, பழக்கப்பட்ட, பவுசு காட்டக்கூடிய சுற்றுலா மையமாக கருதுகிற உருமாற்றப்பட்ட மனநிலைக்கு பலரும் உள்ளாகியிருக்கின்றனர்ஒரு சிறு உதவி செய்துவிட்டு கையளிப்பு செய்வதான பிரமுகத் தோற்றப் படங்களுடன் முகநூலில் விளம்பரம் செய்வது எரிச்சலூட்டுகிற ஒன்று. ஆனாலும் உண்மையுடன் நேர்மையுடன் உதவிசெய்ய முன்வரும் கணிசமான தமிழர்கள் புகலிடத்தில் இருக்கிறார்கள். கடந்த காலங்கள் அவர்களின் பங்களிப்புகளை தேசத்தின் பெயரிலும் குடும்பத்தின் பெயரிலும் சிந்திவிட்ட வரலாறு ஒன்று உண்டு. எண்ணற்ற உதவி நிறுவனங்கள் தோன்றி விதவிதமான வார்த்தைகளில் மனிதாபிமானத்தை உரசி பணம் கறந்து ஏமாற்றினர். இதனால் ஏமாற்றமடைந்த மனநிலை உதவியவர்களிடம் நிறைய உண்டு. இருந்தபோதும் அவர்களுக்குள் உறங்கியிருக்கிற இந்தப் பண்பு செத்துவிடவில்லை.
எவரைக் கேட்டாலும் “யாரை நம்பி பணம் கொடுப்பது” என்ற அயர்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள். (சிலர் இதையே காரணம் காட்டி தமது சுயநலத்தை கயவஞ்சித்தனத்தை மறைக்கவும் செய்கிறார்கள்). காரணம் உதவித் திட்டத்தில் ஒரு தேர்ந்த முறையை இல்லாமைதான். நாட்டில் அர்ப்பணிப்புடன் செயற்படுபவர்கள் இந்த முறைமையை புகலிடத்தில் உதவக்கூடியவர்களுடன் இணைந்து செயற்படுத்தினாலன்றி மாற்றம் எதுவும் இருக்கப் போவதில்லை. நாட்டிலோ புகலிடத்திலோ சேர்க்கும் பணத்தை விரயமின்றி கையாளுதல், கணக்குவழக்கை பகிரங்கமாக முன்வைத்தல், முடிந்தவரை அதை ஆதாரப்படுத்துதலும் ஆவணப்படுத்துதலும், அவற்றை மக்களின் பார்வையில் தொடர்ந்து வைத்திருத்தல் (உம். இணையத்தள முறைமை) என்பன முக்கியம். காட்சிப்படுத்தகிற படங்களை முகநூலில் மட்டும் போடுதல் போதுமானதல்ல. இவை பொதுவாக உதவியமைப்புகள் செயற்படுவதற்கான முறைமையின் முக்கிய அம்சங்கள்.
இன்றைய கொரோனா பிரச்சினையில் நாட்டில் செயற்படுபவர்களின் சுகாதாரப் பாதுகாப்பு முக்கியம். உயர்ந்த அர்ப்பணிப்பை அது கோருகிறது. அதை இங்கிருப்பவர்கள் புரிந்துகொள்ளவும் வேண்டும். இது விநியோகம் சம்பந்தமான மாற்று முறைமைகளையும் கடைப்பிடிக்க கோருகிறது. அவர்களின் அர்ப்பணிப்பு மனப்பான்மையை நாம் மதித்தே ஆக வேண்டும். அதேநேரம் அதுவே ஒரு சரியான முறைமை பேணப்படாமல் விடப்படுவதற்கான அங்கீகாரமாகவும் இருக்க முடியாது. ஒவ்வொரு இடரின் போதும் இந்த திடீர் உதவிப் பணிக்கான தேவை ஏற்படுவதால் ஒரு முறைமை (system) பேணப்பட்டாலொழிய அதைத் தொடர்ச்சியாக அதன் முழு வீச்சுடன் செய்ய முடியாது என்பதை சுட்டுகிற நோக்கிலும், இப் பேரிடர்களின்போதாவது நாம் உதவ முன்வர வேண்டும் என்ற அடிப்படையிலும்எழுதப்பட்ட பதிவு இது.