கால்பந்துக்கு அதிக முக்கியத்துவம் நிலவும் நாடுகள் இவை. மற்றைய விளையாட்டுகள் போலவே ஆண்களும் விளையாடுகிறார்கள். பெண்களும் விளையாடுகிறார்கள். ஆங்கிலத்தில் Team என்பதை டொச்சில் Mannschaft என்பார்கள். Mann என்பது ஆண். இந்த ஆண்மொழிச் சொல்லை அவர்கள் கேள்விகேட்டார்கள்.
வீதியை குறுக்காய்க் கடக்கும் மஞ்சள் வரிக் கோட்டுப் பாதைக்கு ஆங்கிலத்தில் Zebra-cross என்பார்கள். அதை டொச்சில் Fussgängerstrifen என்பார்கள். Fussgänger என்பது ஆண்பால் சொல்.(Fussgängerin என்பது பெண்பால் சொல்). இந்த ஆண்மொழிச் சொல்லை அவர்கள் கேள்விகேட்டார்கள்.
இதையெல்லாம் உச்சரிக்கும்போது யாரும் ஆண்பால் சொல்லாய் உணர்வதில்லை என்று நாம் சொல்லிக்கொள்ளலாம். அதற்காக அதை ஏற்றுக்கொள்ளலாமா. அது பெண்மொழியின் அவசியம் பற்றிப் பேசுபவர்களுக்கு இடறுகிறது. பெண்ணியலாளர்களால் மொழியில் இந்தக் கசடுகளையும் இல்லாமல் பண்ணும் அவசியம் உணரப்படுகிறது. அவர்கள் அந்த ஆண்மொழிச் சொல்லாடல்களை மாற்றவேண்டும் என குரல் எழுப்பினார்கள்.
இந்த Zebra-cross இல்முக்கோண வடிவில் வைக்கப்பட்டிருக்கும் குறியீட்டுப் பலகையில் ஒரு பெண் ஒரு குழந்தையின் கையைப் பிடித்தபடி நடப்பதுபோல் இருக்கும். அதிலும் அவர்கள் கண்வைத்தார்கள். குழந்தை வளர்ப்பு பெண்களுக்கானது என்ற கருத்தியலை தொக்கிவைத்திருக்கும் ஆணாதிக்க சிந்தனையின் குறியீடு அது. அதையும் கேள்விகேட்டார்கள்.
இந்த சம்பவங்கள் நடந்துகொண்டிருக்கும் புகலிட நாடுகளில் இருந்துகொண்டு நாம் பேசுகிறோம். எப்படி?
“ஊரில இருக்கிற சில சண்டியன்கள் இப்பிடித்தான் எங்கயாவது வீரம் பேசிப்போட்டு வந்து பொம்பிளையளின்ர சீலையிக்கை ஒழிச்சிடுவினம்” என்று எழுதுகிறோம்.
“பொம்பிளையளின்ரை சீலைக்குப் பின்னால் ஒளிந்திருந்து கல்லெறியும் கோளையல்ல நான்” என்று எழுதுகிறோம்.
தமிழ்ப்படத்தில் தோற்றுப்போய் வந்த அடியாளிடம் சீலையை கட்டு என்று விட்டெறிகிறான் தாதா.
“பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குரல் எழுப்புகிறோம்” என எழுதும் அறிக்கையில் ஒப்பமிடக் கேட்டு எழுதிய கடிதத்தின் ஆண்மொழியை பெண்மொழி பற்றிப் பேசுபவர்கள் எல்லாம் கடந்துதான் போனோம்.
// தனிநபர் முரண்பாடுகளையும் தாண்டி பொதுவெளி collective முரண்பாட்டுப் பரப்புக்குள் எமக்கு முன்னால் கிடக்கும் ஒரு பிணக்காக கருதி, தமிழ் மொழி பொதுத்தளத்தில் செயற்படுபவன் என்ற அடிப்படையில் எனது ஆதரவை தெரிவிக்கிறேன். //
நீங்களும் தாண்டியிருந்தால் இதில் நிற்க.. “செயற்படுபவன்” என்பதில். செயற்படுபவளுக்கு இடமேயில்லாமல் போய்விட்டது.
இத்தனைக்கும் பெண்ணியக் குரலை உயர்த்தும் நம்மளுக்கிடையிலேயே இந்த அவலங்கள் நடந்தேறிவிடுகின்றன. மார்ச் 8 பெண்கள் தினம். எமது இந்த அவலத்தை அதில் பதிவுசெய்துவிடுகிறேன்.