// டெல்லி மாணவி பாதிக்கப்பட்ட நாளில் இருந்தே அவரது சொந்தப் பெயர், புகைப்படம், இருப்பிடம் குறித்த எந்தத் தகவலுவும் வெளிவரவில்லை. தற்போது அவளது இறப்பிற்குப் பின்பும் கூட புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகவில்லை.//- http://www.facebook.com/cimi.meena.3/posts/592299927453159
இது தேவைதானா?
ஆணாதிக்க விதிமுறைகளுக்குள் இயங்கும் ஒரு சமூகத்துள் ஆணாதிக்க வக்கிரத்தால் பாதிக்கப்பட்ட பெண் தனக்கு நேர்ந்ததை முன்வந்து சொல்லத் தயங்குகிறாள். அவள் ஏற்கனவே பாதிக்கப்பட்டது மட்டுமல்ல, இன்னமுமாய் இந்தச் சமூகத்தால் தொடர்ந்து கலாச்சாரத் தரமிறக்கப்பட்டவளாகத் தான் கருதிவிடப்படுவேன் என்ற அச்சம்தான் காரணம். தன் எதிர்கால வாழ்வில் தான் மீளமுடியாதவளாக ஆக்கப்பட்டுவிடுவேன் என்ற அச்சம் அவளை ஆட்கொண்டுவிடுகிறது. இந்திய இலங்கை இராணுவத்தால் பாலியல் வன்முறைக்கு உட்பட்டவர்கள் விடயத்திலும் இதுதான் நடந்தது.
எனவே டெல்லியில் நடந்த கொடுமையினை வெளிப்படுத்திய பத்திரிகையாளர்கள் அவளது பெயரை, ஊரை வெளியிடவில்லை என பத்திரிகையாளர்களை „கலாச்சாரவாதம்“ என்ற கலக அரசியல் சொல்லாடலுக்குள் வைத்து வாதிடுவதிலுள்ள பிரச்சினை பற்றி சொல்ல வருகிறேன். அவர்கள் „குடும்ப கவுரவம் பாதிக்கப்பட்டுவிடும்“ என்று கூறுவதால், அல்லது அந்த எல்லைக்குள்தான் அவர்கள் செயல்படுகிறார்கள் என்று கருதுவதால், நமது கருத்தை அதிலிருந்து தொடங்குவதல்ல. மாறாக அவற்றை (தனிப்பட்ட விபரங்களை) வெளியிடுவதில் ஏற்படக்கூடிய விளைவுகளிலிருந்துதானே தொடங்க முடியும்.
அவர்கள் கலாச்சார காவலர்களாக அல்லது அதற்கு துணைபோபவர்களாக இருக்கலாம் என்பதில் உடன்பட மறுப்பதல்ல இது. மாறாக ஒரு செயலினை ஆய்வுசெய்வதில் நம்மை ஆதர்சிக்கும் கோட்பாட்டை, கருத்தை சொருகுவதிலுள்ள அவசரம்தான் காரணம் என்கிறேன். அது எமது ஆய்வுமுறையை மட்டுப்படுத்திவிடுகிறது. ஆணதிகாரத்தின் கிடுக்குப்பிடி தளர்ந்த இந்த முதலாளித்துவ நாடுகளில்கூட இவ்வாறான செய்திகள் புனைபெயருடன் (அடைப்புக்குறிக்குள் வயது விபரம் தரப்பட்டு) வெளிவருகிறது. இவ்வாறான விடயங்களில் செய்திதான் முக்கியமேயொழிய யார் என்பது (தனிநபர் விபரம்) ஒரு சமூக ஆய்வாளருக்கு முக்கியமல்ல.