1. நிறவெறி நான் கையைக் கழுவுகிறபோது
நீரில் கலைந்த அழுக்குளைப் பார்த்து உன் நிறம் கரைகிறது என்று சொல்லிச் சிரித்தான் சகதொழிலாளி. அவனது வெள்ளைத்தோலில் அப்பிக்கொண்டிருந்தது நிறவெறி.
2. மனிதாபிமானம்? எனது முகத்துக்கு முன்னால் எனது பெயரையும் முதுகுக்குப் பின்னால் எனது கறுப்புநிறத்தையும் அவன் அடையாளப்படுத்திக் கொண்டேயிருந்தான். இரண்டையும் பிணைத்து எல்லா மனிதர்களும் சமம் என்றபடி பல்லிழித்தான் 3. அமைதியின்மை இலக்கினைச் சரியாகவே ஊடுருவிக் காண்பிக்கிறது என் பார்வை – ஆனாலும் விரலசைப்பில் குறி தவறிப்போய்விடுகிறது. மீண்டும் துருத்திற்று என் அமைதியின்மை. 4. ஆணாய்ப்பட்டவன் அவர்கள் தொடைகளுக்கிடையிலும் மார்புகளுக்கிடையிலும் கவிதையை ஒளித்துவைத்திருந்தார்கள் – எனது குறிவிறை பார்வை பிசகாமலிருக்க. நான் ஆணாய் நீண்டுபோய்க் கிடந்தேன். (2008) – ரவி |