ஒவ்வொரு அழிவின்போதும் அவர்கள்
நாலு வார்த்தைகளுடனும்
கையில் ஒரு கொப்பியுடனும் வந்து போகிறார்கள்.
சாவை நினைத்து அழுகிறது மனம்.
என்னுள் ஏதோவோர் குற்றவுணர்வை
புதைத்துவிட்டேனும் தம்மைச் சாதிக்க
பயிற்சி எடுக்கிறது அவர்களின் வார்த்தைகள்.
ஓயாது சலிப்பின்றி
துயர் பாடும் பாட்டுக்களும்
நகங்களை எடுத்து வாள்களாய்ச் சுழற்றிக்
காட்டும் வித்தைகளுமாய்
அறையைக் காட்சிகள் வியாபிக்கின்றன.
உடல் சறுகச் சறுக
சீர்செய்து
மீண்டும் மீண்டும் இருக்கையைப் பேணுகிறேன்.
தொலைக்காட்சி தொடர்ந்தும்
காட்சிகளைச் செய்து
தள்ளிக்கொண்டிருக்கிறது.
கலாச்சாரம் பற்றி கவலைப்பட்டபடி
தொப்புள்வெளி விரிய ஆடும் கதாநாயகியின் இடுப்பில்
காணாமல் போய்விடுகிறேன்.
நேரம் வேகவேகமாய் நகர்ந்து முடிக்கிறது.
ஒவ்வொரு பிறந்தநாள் கொண்டாட்டங்களின்போதும்
மெல்லத் தொடங்குகிறது உரையாடல்.
சினிமா அரசியல் என தொடர
சொற்களின் சேர்க்கைளிலும் மோதல்களிலும்
வைன் கிளாஸ் மெல்ல மெல்ல
காலியாகிக் கொண்டிருக்கிறது.
வார்த்தைகளின் கனத்தை அழிப்பதில்
வைன்போதையைவிட ஏதோவொன்று
முந்திக்கொள்கிறது.
பட்டியலை சரிபார்த்து
வழமையான சிரிப்புகளைச் செய்து நாம்
கலைந்து கொள்கிறோம்.
பனிக்காலமிது.
பனித்திரள் தன்னழகை வெண்ணிறகில்
விரிக்கிறது வியாபகமாய்.
இயந்திரக் காட்டினுள் வேலை என்னைத்
தின்று தின்று துப்புகிறது.
கிடைக்கும் ஓய்வினில் இந்த இயற்கை தன்னும்
சம்பந்தமற்றுப் போகிறது எனக்கு.
இன்றைய ஓய்வையும்
ஒரு திரைப்படம் போலவொரு காட்சி நெய்தலிலோ
அல்லது பட்டிமன்றம் போன்றதொரு
நரம்பிசைக்கும் புனைவுகளிலோ
நான் தமிழனாகி இன்னமுமாய்
தமிழன் மட்டுமேயாகி வாசிக்கப்படுவதற்காய்
மண்டப விலாசத்தைத் தேடுகிறேன்.
வாழ்க்கை நகர்கிறது அதுவாய்.
-ரவி (01032005)