இன்னொரு புதுவருட வரவும்
நிகழ்த்தப்பட்டாயிற்று
உடல்நல உளநல விசாரிப்புகள்
மட்டுமன்றி
சமாதானம் அமைதி என்றெல்லாம்
வாழ்த்துக்கள் பரிமாறப்பட்டுமாயிற்று.
முந்தைய ஆண்டினில் தொடங்கிய
எனது நெடுங்கவிதையை
இப்பவும்
அப்படியே தொடரமுடிகிறது.
கடந்துபோன ஆண்டின் முதுகெலும்பை
போர் உடைத்துவிட்டிருந்தது.
உலக வீதிகளை அப்பிய
மனிதக் குரல்களையெல்லாம்
தூசிபோல் தட்டி
போருக்குப் புறப்பட்டனர்
ஐனநாயக ஏற்றுமதியாளர்.
விளைவாய்
இன்னொரு வியட்நாமை ஈராக்கில்
வரையும்
ஓவியமுனைப்பும் தொடங்கப்பட்டாயிற்று
போரின் ஓவியர்கள்
இரத்தம் வடியும் தூரிகையுடன்
உயிர்முகட்டில் உலாவருகின்றனர்.
எனது மண்ணும்
காட்டேறி ஓவியர்களின் கூடமாகி
இருபது ஆண்டுகளை புதைத்திருக்கின்றது.
முந்தைய ஆண்டின் போர் உறக்கம்
இந்த ஆண்டினுள்ளும்
கைகால்களை எறிந்தபடி நீளலாம்
ஆனாலும் எம்மிடம்
சமாதானம் கனவழிந்து
மண்நனைப்பதாயில்லை.
நாசித் தீயில் உயிர்வதங்கிய
யூத இனமும் தொடர்ச்சியாய்
பலஸ்தீனத்தின்மேல் தீயை உமிழ்கிறது,
குறைவேயில்லாமல்.
ஒடுக்குமுறைக்கு உட்பட்ட இனம் நாம்
இன்னொரு இனத்தை ஒடுக்குவோமா என்ற
என்னவர் சூத்திரத்தை
மலம் தின்னும் நாய் காவிச்செல்கிறது,
இஸ்ரேல் வீதியில்.
இதுகண்டு எச்சா¤க்கைப்படுதலும்
குற்றமாகிற்று எமது மண்ணில்.
எம்மை அமைதியாய்க் கடந்துசென்ற
இரண்டாயிரத்து மூன்றாம் ஆண்டு
ஈரானின் பூமியை புரட்டியெறிந்துவிட்டு
மரணித்திருக்கிறது.
ஒரு நூறல்ல ஓராயிரமல்ல
முப் பதினாயிரம் உயிர்கள்
நின்ற இடத்திலேயே புதைந்துபோன அவலம்
இந்த ஆண்டுக்குமுரியதுதான்.
புத்தாண்டே!
உன்னால் எதையும் அழித்து
எழுதிவிடமுடிகிறதா?
நம்பிக்கைகளை நாம் எப்போதுமே
உருவாக்கிக்கொண்டுதானிருப்போம்
ஒவ்வொரு வீழ்தலிலும் மீள எழுவோம்- அன்றி
எழுதற்காய் போராடுவோம்,
ஓர் அருவியாய்.
என்றபோதும்
வருக புத்தாண்டே!
உன்மீதும் எமது எதிர்பார்ப்புகளை
நம்பிக்கைகளை
ஊன்றமுடிபவர்களுக்காக உனது வரவை
நிகழ்திவிடுகிறோம்.
வருக!
– ரவி (080104)