(ஓர் அஞ்சலி)
மரணம்
வயதை வெல்லும் மரணம் கொடியது
நண்பனே
எடுத்துச் செல்
எனது இரு கண்ணீர்த் துளிகளையும்
எடுத்துச் செல்
மிகுதியை என் கண் மடல்களுக்குள்
தேக்கிவைக்கிறேன்.
உனது முகம் இறுகியது
உன் புன்னகை செத்துப் போனது
பார் நண்பா
ஒரு கனவை செய்து காட்டுமாப்போல்
நீ
சவப்பெட்டிக்குள்
வளர்ந்து கிடந்தாய்
நம்ப முடியவில்லை
என்னால் நம்பமுடியவில்லை – நீ இறந்துபோய்விட்டதாய்.
என்னிடம் இன்னும் கண்ணீர்த் துளிகள் இருக்கின்றன
அவையும்
ஒரு தசாப்தத்தை பின்னால்
இழுத்துச் செல்லும் வல்லமை கொண்டன
அவை
தொலைந்துபோன தோழர்களுக்காகவும்
இழந்துகொண்டிருக்கும் நண்பர்களுக்காகவும்- உன்போல.
எப்படி முடிந்தது
ஆயிரமாயிரம் தோழர்கள்
வீசியெறிந்த பயங்களை எப்படிச் சூடினர்
ஓயாமல் இயங்கிய தசைகளை
எது கட்டிப் போட்டது
விரக்திகள் கொண்டதும்
வாழாவிருந்ததும்
எப்படி எப்படி…
எல்லாம் பட்டியலாய் நீண்டுபோனது
நதியொடுங்கி ஓடையானாய்
இருந்தும்
ஓய்ந்துபோக முடியவில்லைப் பார்
உன்னால்
கேள் நண்பா
எல்லாமே நேற்றுப்போல
காலத்தை அழித்து அழித்து எழுதிய
உன் உழைப்பும்
மனங்களில் மறைந்து போகுமெனில்
தியாகங்கள் மறக்கப்படுமெனில்…
ஒரு மண்புழுவோடுகூட
நான் நிறைய பேசவேண்டியிருக்கும் – அதன்
அப்பாவித்தனத்திற்காய்.
-ரவி